TNPSC தேர்வுக்குத் தயாராகும்போதே சம்பாதிக்கலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளை எழுதுவோருக்குப் பயிற்சி வழங்கத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தன்னார்வ கல்விக் குழுக்கள் (Self Study Groups) செயல்படுகின்றன. அந்தக் குழு மூலம் டி.என்.பி.எஸ்.சி. (TNPSC), டி.என்.யு.எஸ்.ஆல்.பி (TNUSRB), எஸ்.எஸ்.சி. (SSC), ஆர்.ஆர்.பி. (RRB), ஐ.பி.பி.எஸ். (IBPS), டி.ஆர்.பி. (TRB) போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு மேல் இந்தப் பயிற்சி வகுப்புகள் மூலம் பலன் அடைந்து வருகிறார்கள்.
இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரியும் ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுன்றன என்று அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உடைய நபர்கள் கீழக்காணும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 10ஆம் தேதி என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணி வாய்ப்பு பற்றி கூடுதல் தகவல்களுக்கு 044-22501006, 044-22501002 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கல்வித் தகுதி, போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற முன் அனுபவம், இப்போதைய பணி, கற்பிக்க விரும்பும் பாடங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைத் தவறாமல் பதிவேற்ற வேண்டும்.
இதனிடையே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023ஆம் ஆண்டுக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.