பொருளாதார வளர்ச்சிக்கு ‘ஆப்பு’ வைத்த மோடியின் ரூபாய் நோட்டு தடை….4-வது காலாண்டில் ஜி.டி.பி. ‘செம அடி’..
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2016-17ம் நிதியாண்டின் முதல் இரு காலாண்டில் சிறப்பாகச் சென்ற நிலையில், பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால், பொருளாதார வளர்ச்சி படுமோசமாகச் சரிந்துள்ளது அரசின் புள்ளிவிவரங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக வேளாண்மை, மீன்பிடித்தொழில், காடு சார்ந்த தொழில்,உற்பத்தி துறை, கட்டுமானம், வர்த்தகம், ஓட்டல் வர்த்தகம், போக்குவரத்து ஆகிய அனைத்து துறைகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
4-ம் காலாண்டு அறிக்கை
2016-17ம் நிதியாண்டுக்கான ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டு வளர்ச்சி அறிக்கையை, நேற்று முன்தினம் மத்திய புள்ளியில் துறை அமைச்சகம்வௌியிட்டது. இதில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக இருந்தது.
அடிப்படை ஆண்டுமாற்றம்
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு பின், வந்த பிரதமர் மோடி தலைமையிலான பாரதியஜனதா அரசு, நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியைக் கணக்கிடும் முறையை மாற்றி அமைத்தது. அதன்படி, 2011-12ம் ஆண்டை அடிப்படையாக ஆண்டாக வைத்து பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு வருகிறது.
குறைந்தது
அதனால், தாங்கள் ஆட்சிக்கு வந்த 2-வது ஆண்டில் அதாவது 2015-16ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயர்ந்துள்ளது என பிரதமர் மோடி தலைமையிலான அரசு தெரிவித்தது. அந்த அடிப்படையில் பார்க்கும் போது, 2016-17ம் நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 7.1 சதவீதமாக குறைந்து இருக்கிறது. கடந்த 2015-16ம் நிதியாண்டில் 8 சதவீதமாக பதிவு செய்யப்பட்டு இருந்ததைக் காட்டிலும் மிகக் குறைவாகும்
ஒப்பீடு
மேலும், 2015-16ம் ஆண்டின் 4-ம் காலாண்டோடு 2016-17ம் ஆண்டின் 4-ம் காலாண்டோடு ஒப்பிடுகையில், வளர்ச்சி குறைந்துள்ளது. அதாவது, 2015-16ம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாகவும், 4-ம் காலாண்டில் 8.7சதவீதமாகவும் இருந்து.
இதுவே 2016-17ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாகவும், 4-ம் காலாண்டில் 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருவதையே காட்டுகிறது.
வளர்ச்சி குறைந்தது
இது குறித்து பொருளாதார ஆய்வாளர் வஸ்தவா கூறுகையில், “ கடந்த நிதியாண்டைப் பொருத்தவரை ரூபாய் நோட்டு தடைக்கு பின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. மறைமுக வரிகளின் உயர்வால், வேண்டுமானால், மொத்த உள்நாட்டு உற்பத்தி சிறிதளவு உயர்த்திருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும்போது, 3-ம் மற்றும் 4-ம் காலாண்டில் வளர்ச்சியை ஆண்டின் முதல் மற்றும் 2-ம் காலாண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் குறைந்துள்ளது.
ரூபாய் நோட்டு தடை
ஆதலால், ரூபாய் நோட்டு தடைதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு செக் வைத்து, கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தௌிவாகத்தெரிகிறது’’ எனத் தெரிவித்தார்.
மழுப்பல்
ஆனால், இந்த கூற்றை அரசின் தலைமை புள்ளியியல் ஆய்வாளர் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “ கடந்த நிதியாண்டின் 4-ம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரங்களை கடந்த காலத்தோடு ஒப்பிட்டால் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கிறது என்பது தெரிகிறது’’ எனத் தெரிவித்தார்.