‘புஸ்வானமான’ மோடியின் ரூபாய் நோட்டு தடை… புறப்பட்ட இடத்துக்கே பின்நோக்கி வந்த ‘டிஜிட்டல் பணப் பரிமாற்றம்’
ரூபாய் நோட்டு தடை காலத்துக்கு பின் டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரித்து ஓரளவுக்கு சீராகச் சென்ற நிலையில், கடந்த மாதத்தில் கடுமையாகச் சரிந்துள்ளது. மீண்டும் தொடங்கிய இடத்துக்கே பின்னோக்கி வந்துள்ளது.
நாட்டில் ஊழல், கருப்புபணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்க புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மக்களை டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கு மாற்ற மத்திய அரசு அறிவுறுத்தியது. கிரெடிட், டெபிட் கார்டு, மொபைல் ஆப்ஸ் ஆகியவை மூலம் பணப்பரிமாற்றம் செய்ய அறிவுறுத்தியது.
இதனால், ரூபாய் நோட்டு தடைக்கு பின் 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டிஜிட்டல் பரிமாற்றத்தின் மதிப்பு ரூ.94 லட்சம் கோடியாக இருந்தநிலையில், 2017, மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.149.58 லட்சமாக உயர்ந்தது.
ஆனால், அதைத் தொடர்ந்து மக்களிடத்தில் காகிதப்பணம் தட்டுப்பாடின்றி புழங்கியதைத் தொடர்ந்து டிஜிட்டல் பரிமாற்றத்தின் மதிப்பு படிப்படியாகச் சரியத் தொடங்கியது.
2017, ஏப்ரல் மாதம் டிஜிட்டல் பரிமாற்றம் 109.60 லட்சம் கோடியாகக் குறைந்தது, ஜூலை மாதம் ரூ.107 லட்சம் கோடியாகவும் சரிந்தது. பின்னர் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் அதிகரித்த டிஜிட்டல் பரிமாற்றம் ரூ.124.70 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆனால், மீண்டும் குறைந்த டிஜிட்டல் பரிமாற்ற மதிப்பு அக்டோபர் மாதத்தில் ரூ.99. 28 லட்சம் கோடியாக வீழ்ச்்சி அடைந்தது. இது ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்ட போது இருந்த நிலையை ஒட்டிய மதிப்புக்கு வந்துள்ளது.
ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்படுவதற்கு முன் நாட்டில் பணப்புழக்கம் ரூ.17.01 லட்சம் கோடியாக இருந்தது. ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டதும், இது ரூ. 7.81 லட்சம் கோடியாகக் குறைந்தது. இதனால் மக்கள் வேறுவழியின்றி டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறினர். இந்நிலையில், புழக்கப்பழக்கம் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி தற்போது ரூ.15.33 லட்சம் கோடியாக இருப்பதால், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.