சாலைகளில் விதிகளை மீறி கார்கள், கனரக வாகனங்களை நிறுத்தினால், ரூ.1000 அபராதம் விதிக்க மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது குறித்து மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் கூறுகையில், “ சாலையில் சட்டவிரோதமாக, விதிகளை மீறி கார்கள், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாக இது முக்கியக்காரணமாக இருக்கிறது. அப்படி நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களைக் கண்டுபிடித்து இப்போது அதிகபட்சமாக ரூ. 200 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இனி, இந்த அபராதத் தொகையை ரூ.ஆயிரமாக உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. அதேசமயம், விதிகளை மீறி சாலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார்கள், உள்ளிட்ட வாகனங்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.200 வெகுமதியும் அளிக்கப்பட உள்ளது.

இதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது சட்டமாக நடைமுறைக்கு வரும்போது, விதிகளை மீறி பார்க்கிங் செய்வது பெருமளவு குறையும்'' எனத் தெரிவித்தார்.