அடுத்தவர் வங்கிக்கணக்கில் செல்லாத ரூபாயை டெபாசிட் செய்யலாமா?
வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதில் புதிய கிடுக்கிப்பிடிகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.
நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் இருந்த ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். .
இந்நிலையில், கருப்பு பணத்தை வங்கியில் அதிகமாக டெபாசிட் செய்வதை தடுக்கும் வகையில் தனது நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
அதன்படி ரிசர்வ் வங்கி வங்கியில் பணம் டெபாசிட் செய்வது குறித்து புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
அதன்படி, தனிநபர் ஒருவர், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனது வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இம்மாதம் 30-ந்தேதிக்குள் பல முறை டெபாசிட் செய்ய முடியாது, ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
செல்லாத ரூபாய்களாக ரூ. 5 ஆயிரம்வரை வங்கிக்கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் டெபாசிட்செய்யலாம். அதற்கு தடையில்லை. ஆனால், வருமானவரித்துறையினர் விசாரணை எதிர்கொள்ள நேரிடும். வங்கி அதிகாரிகளும் விசாரணை நடத்தி, எழுத்துப்பூர்வ பதிலை பெற்றுககொள்வார்கள்.
இதில் நம் வங்கிக்கணக்கு தவிர்த்து அடுத்த வங்கிக்கணக்கில் செல்லாத ரூபாய்களை டெபாசிட் செய்யலாம். அதற்கும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, தன்னுடைய வங்கிக்கணக்கு தவிர்த்து, அடுத்தவர் வங்கிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளைடெபாசிட் செய்யலாம். ஆனால், யாருடைய கணக்கில் டெபாசிட் செய்ய இருக்கிறோமோ அவரின் ஒப்புதல் கடிதம், அவரின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை டெபாசிட் செய்வோர் வங்கியில் சமர்பிக்க வேண்டும்.
கே.ஒய்.சி. விதிமுறைகள் படி வங்கிக்கணக்கு வைத்து இருப்பவர் மட்டுமே, செல்லாத ரூபாய் நோட்டுகளை ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்ய முடியும். அவ்வாறு கே.ஒய்.சி. விதிமுறைகள் படி வங்கிக்கணக்கு இல்லாதவர்கள், ரூ. 50 ஆயிரம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய இயலும்.