ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பல்வேறு வங்கிகளின் மூத்த அதிகாரிகள் 156 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 41 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாநிலங்கள் அவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் போது, பல்வேறு முறைகேடுகளில் அரசு, தனியார் வங்கிகளின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அதற்கான முகாந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் 156 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 41 அதிகாரிகள் பணிஇடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், பொதுத்துறை வங்கிகள் உதவியுடன் 26 வழக்குகளை, போலீசார், சி.பி.ஐ. அமைப்புகள் பதவு செய்துள்ளனர்.

இதில் தனியார் வங்கிகளைச் சேர்ந்த 11 ஊழியர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுப்பதில், முறைகேட்டில் ஈடுபட்டனர் என்பதை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை சஸ்பெண்ட் செய்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. மேலும், வங்கி ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.
மேலும், ஊழியர்கள் இதுபோன்ற தவறுகளையும், மோசடிகளையும் செய்யாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
