ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீடு - மாறன் சகோதரர்களுக்கு அடி மேல் அடி...
ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர், மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு, தனது ஏர்செல் நிறுவனத்தை வலுக்கட்டாயமாக விற்பனை செய்ததாக கூறியிருந்தார்.
மேலும், ஏர்செல் நிறுவனம் விற்பனை செய்த பின்னரே, அதன் உரிமம் மேக்சிஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகவும், அதற்கு மத்திய அமைச்சராக இருந்த அதிகார பலத்தை தயாநிதி மாறன் பயன்படுத்தினார்.
மேலும், இதற்காக அன்னிய செலாவணி பணத்தை அவர் பெற்று கொண்டார். அந்த பணத்தை சன் குழுமத்தில், சேர்த்துவிட்டனர் என குறிப்பிட்டு இருந்தார்.
இதைதொடர்ந்து அமலாக்த்துறை, தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகள் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், மலேசியாவை சேர்ந்த அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட சிலருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் வெளிநாட்டில் இருப்பதால், இந்த வழக்கில் ஆஜராவதில் இழுப்பறி ஏற்பட்டது. இதனால், இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதரர்களை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதையடுத்து அமலாக்கத்துறை, டெல்லி உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கில் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அதனை ஏற்று கொண்ட நீதிமன்றம், இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ, இன்று மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை ஏற்று கொண்ட நீதிமன்றம், 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.