டெல்லியில் தொடரும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில்சேவைகள் இன்றும்பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு மிகக்கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.

சாலையில் வாகனங்கள் மிக குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. விடிந்து வெகுநேரம் ஆன பின்பும், போதிய வெளிச்சம் கிடைக்காததால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கப்பட்டன.

டெல்லி ஆர்.கே.புரம் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியிலிருந்து சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் 2 மணிநேரம் தாமதமாக வருவதுடன், ஒரு தனியார் விமானத்தின் சேவையும் ரத்து செய்யப்பட்டன. டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய 12 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 70 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

இதேபோல், உத்தரப்பிரதேச மாநில மாநிலத்திலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. அலகாபாத், லக்னோ உள்ளிட்ட இடங்களில் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது. அலகாபாத் நெடுஞ்சாலையில் வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பஞ்சாப் மாநிலத்திலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. அம்ரித்சர் உள்ளிட்ட இடங்களில் நிலவும் பனிமூட்டத்தால் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது