டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என தெரிவித்துள்ள அமைச்சர் அதிஷி, பாஜக மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அதிஷி, பாஜக மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு நெருக்கமான ஒருவர் மூலம் பாஜக தன்னை அணுகியதாக தெரிவித்த அவர், தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டுமானால் பாஜகவில் இணைய வேண்டும் இல்லையென்றால் அடுத்த ஒரு மாதத்தில் அமலாக்கத்துறை என்னை கைது செய்யும் என பாஜக மிரட்டியதாக அதிஷி குற்றம் சாட்டினார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அடுத்த இரண்டு மாதங்களில் சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா ஆகிய ஆம் ஆத்மி தலைவர் 4 பேர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிஷி அப்போது தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருப்பதாக பாஜக கருதுகிறது. எனவே, ஆம் ஆத்மி கட்சியின் அடுத்தக்கட்ட தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர் என பாஜக மீது அதிஷி குற்றம் சாட்டினார்.

கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம்: அண்ணாமலை தேர்தல் பிரசாரம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அதிஷி, கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றால்தான் ராஜினாமா செய்ய வேண்டும். ஜெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டெல்லியில் ஆட்சியை கவிழ்பது பாஜகவுக்கு எளிதாகி விடும். எனவே, அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என்றார்.

“நமது நாட்டில் இது தொடர்பான அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால், மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. அவருக்கு டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மை உள்ளது. எனவே அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதற்கான அவசியம் இல்லை.” என அதிஷி விளக்கம் அளித்தார்.