உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்கு இன்று திரும்பவுள்ளார்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த 10ஆம் தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. முதல்வருக்கான பணிகளை கெஜ்ரிவால் செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடையுமாறு உத்தரவிட்டது.

பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை! இந்தியா கூட்டணிக்கு ஏமாற்றம்! எக்ஸிட் போல் 2024 சொல்வது என்ன?

இதனிடையே, தன்னுடைய இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு கோரிய கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரணைக்கு பட்டியலிட மறுப்பு தெரிவித்துடன், விசாரணை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும்படி கூறி கெஜ்ரிவாலின் மனுவை நிராகரித்தது.

தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன் 2ஆம் தேதியன்று (இன்று) அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்து திகார் சிறைக்கு திரும்ப வேண்டும். அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்கு இன்று திரும்பவுள்ளார்.

முன்னதாக, உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரணடையவுள்ளதாகவும், இதற்காக மதியம் 3 மணியளவில் தனது வீட்டில் இருந்து புறப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ளுமாறும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.