அருகில் இருப்பவரை கூட பார்க்க முடியாத அளவுக்கு டெல்லியில் அடர் பனிமூட்டம்; 13 இரயில்களின் சேவை ரத்து...
அருகில் இருப்பவரை கூட பார்க்க முடியாத அளவுக்கு டெல்லியில் அடர் பனிமூட்டம் நிலவுவதால் 39 இரயில்கள் தாமதமாகவும், 4 இரயில்கள் நேரம் மாற்றப்பட்டும், 13 இரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டும் உள்ளன.
புத்தாண்டு பிறந்ததில் இருந்தே டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. காலை வேளைகளில் கடும் குளிருடன் புகை மூட்டம் போல அடர்த்தியாக பனிமூட்டம் இருக்கிறது.
இந்த அடர் பனிமூட்டத்தால் அருகில் இருப்பவர்களை கூட சரியாக பார்க்கமுடியாத சூழலில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே, டெல்லியில் காற்று மாசுத் தன்மை அதிகளவில் இருக்கும் வேளையில் குளிரும் இணைந்து மக்களை சிரமத்திற்கு ஆளாக்குகிறது. இதனால், மக்கள் தீயை மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். காலை 10 மணியைத் தாண்டியும் பனிமூட்டம் விலகாமல் இருப்பதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கின்றனர்.
இந்த நிலையில், அடர் பனிமூட்டத்தால் இரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரயில்கள் மிகவும் மெதுவாக இயக்கப்படுவதும் சில இரயில்களின் நேரம் மாற்றப்பட்டும், சில இரயில்களின் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டும் உள்ளன.
அதன்படி, 39 இரயில்கள் தாமதமாகியும், 4 இரயில்களின் நேரம் மாற்றப்பட்டும், 13 இரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டும் உள்ளன.
கடும் குளிரால் காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.