டிவிட்டர் யுத்தம் நடத்தி வந்த லாலு பிரசாத் யாதவ் சிறையில் என்ன செய்கிறார்...?
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், இப்போது ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். தனது மகன் தேஜஸ்வி விவகாரத்தில் பெரிதும் அரசியல் செய்த லாலு பிரசாத், ஒரு கட்டத்தில் கூட்டணி அரசில் இருந்து கட்சி கழற்றி விடப் பட பின்னர், அந்த ஆற்றாமையைப் புலம்பித் தீர்த்தார். ஏற்கெனவே ஒரு முறை சிறை சென்று வந்ததால், தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டார். இருப்பினும், மாட்டுத் தீவன ஊழல் வழக்கு அவரை மாற்றிவிடவில்லை.
நவீன அரசியலுக்கு இப்போது இண்டெர்நெட்டும் சோஷியல் மீடியாக்களும் தேவை என்பதை உணர்ந்துகொண்ட லாலு, அவ்வப்போது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார். அதன் பின்னர், அவரும் ஒரு டிவிட்டர் அரசியல்வாதியாகவே மாறிப் போனார்.
இந்நிலையில், ஆறில் இரண்டு வழக்குகளில் குற்றவாளி என்று லாலு மீது தீர்ப்பு அளிக்கப் பட்டது. அந்த இரண்டாவது வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப் பெற்று மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளார் லாலு பிரசாத். அவர் இப்போது தாம் டிவிட்டரில் நேரடியாக உரையாட முடியாவிட்டாலும், தகுந்த நபர்கள் மூலம் டிவிட்டரில் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பேன் என்று கூறியிருந்தார். இப்போது சிறையில் அடைபட்டுள்ள லாலு, சக கைதிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டு, பிடித்த உணவுகளை உண்டுகொண்டு பொழுதைக் கழித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனிப்பு சோளம், பச்சைப் பட்டாணி, கீரை, துவரம் பருப்பு போன்ற விருப்ப உணவுகளை லாலு பிரசாத் சிறையில் ரசித்து உண்கிறாராம். இதனை ஒரு ஹிந்திப் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.
தற்போது லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள ஹாட்வார் சிறையில் உயர் வகுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கைதி எண் 3351 என, சிறைக்குள் இருந்தாலும் நாட்டு நடப்பை அறிந்து கொள்வத்ல் ஆர்வம் காட்டும் அவர், தினமும் செய்தித்தாள்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாராம்.
தொடர்ந்து, செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசியல் நிலவரங்களைக் குறித்து சிறையில் கைதியாக உள்ள பிற அரசியல்வாதிகளுடன் விவாதித்து அரட்டையடிக்கிறார். மற்ற நேரங்களில் அவரது அறையில் உள்ள டிவியைப் பார்த்துக் கொண்டே தேநீர் அருந்தி, சக கைதிகளுடன் நாட்டு நடப்பை விவாதித்துக் கொண்டு பொழுதை போக்குகிறாராம்.