dalit woman murder in uttar pradesh
என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சமூகத்தில் ஏராளமான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் தாழ்த்தப்பட்டோர் மீதான சாதி வெறித் தாக்குதல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை இந்த கொடூர சம்பவம் நிரூபித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாவித்ரி தேவி.
இவர், அங்குள்ள கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது, அஞ்சு என்பவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்த குப்பையை எடுத்துள்ளார்.
இதைக்கண்டு ஆத்திரமடைந்த அஞ்சு, தன் வீட்டு குப்பைத் தொட்டியைத் தலித் பெண்ணான சாவித்ரி தொட்டு தீட்டு ஏற்படுத்தி விட்டதாகக் கூறி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அஞ்சுவுடன் சேர்ந்து அவரது மகன் ரோஹித்தும் தடியால் சாவித்ரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சாவித்ரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆறு நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர், திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குப்பைத் தொட்டியை தொட்டதற்காக தலித் என்பதற்காக கர்ப்பிணிப் பெண் என்றுகூட பாராமல் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
