தீயாய் பரவும் ரான்சம் வைரஸ்... வங்கிகளை எளிதில் தாக்கும் - எச்சரிக்கும் சைபர் க்ரைம்!!!
ரான்சம் வைரஸ் இந்திய வங்கிகளின் கம்ப்யூட்டர்களில் விரைவில் புகுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய ‘டூல்’களை கொண்டு, உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள அரசு நிர்வாகத்தின் கம்ப்யூட்டர்களில் ‘ரான்சம்வேர்’ என்ற வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி , உக்ரைன், தைவான் உள்பட 150 நாடுகளில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளது.
குறிப்பாக இந்த ரான்சம் வைரஸ் தாக்குதலால் இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் , அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. ரஷ்யாவும் உள்துறை அமைச்சகம், அந்நாட்டின் மிகப்பெரிய ஷபெர் வங்கியிலும் இந்த சைபர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இந்த ரான்சம் வேன் வைரஸ், உலக அளவில் உள்ள அனைத்து கணினிகளுக்கும் பரவும்படி செய்துள்ளனர். இந்த வைரஸ் கம்யூட்டர்களில் புகுந்தால், அதில் உள்ள அனைத்து தகவல்களையும் குறிப்பாக வீடியோ, புகைப்படம், ஆவணங்கள் அனைத்தையும் இந்த வைரஸ் முடக்கும் தன்மை கொண்டது.
மேலும், லாக் செய்யப்பட்ட பைல்களை விடுவிக்க, 300 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்தினால், 3 நாட்களுக்கு பின் விடுப்பேன் என எச்சரிக்கை செய்து உலக நாடுகளையே அலற வைத்து வருகிறது.
இந்நிலையில், இந்திய வங்கி நிர்வாகங்களுக்கு, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் நிர்வாகத்துக்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் வைரஸ் நுழைந்தால், பெருமளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கிய ஆவணங்களை முடக்கம் செய்வதுடன், சில ஆவணங்களை காப்பி செய்து கொள்ளும் நிலை உள்ளது.
இதனால், வங்கி நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வங்கி நிர்வாகத்தினர், எச்சரிக்கையுடன் இணையதள சேவையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.