இந்தியாவின் 4 மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வவ்வால்களில் கொரோனா வைரஸ்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வவ்வால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.


இந்நிலையில், இந்தியாவின் 4 மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வவ்வால்களில் கொரோனா வைரஸ்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. வவ்வால்கள் பரந்த அளவிலான கொரோனா வைரஸ்களை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. மேலும், வவ்வால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ (இடைநிலை விலங்கு) கொரோனாவை பரப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

7 மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு வகையான வவ்வால்களின் தொண்டை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வவ்வால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வவ்வால்களிடம் நடத்தப்பட்ட டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை சோதனையில் அவகைளுக்கு நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
