இந்தியாவில் கொரோனாவிற்கு 32 பலி.. 1,251 பாதிப்பு..! நாளுக்கு நாள் எகிறும் எண்ணிக்கை..!
கேரள மாநிலத்தில் இதுவரை 202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஒருவர் பலியாகியுள்ளார். அதற்கடுத்தபடியாக மஹாராஷ்டிராவில் 198 பேர் பாதிக்கப்பட்டு நாட்டிலேயே அதிகமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு 1251 பேர் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 32ஐ எட்டியுள்ளது .இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறது.
இந்தியாவில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் இதுவரை 202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஒருவர் பலியாகியுள்ளார். அதற்கடுத்தபடியாக மஹாராஷ்டிராவில் 198 பேர் பாதிக்கப்பட்டு நாட்டிலேயே அதிகமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் 83 பேரும், டெல்லியில் 87 பேரும், தெலுங்கானாவில் 71 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 82 பேரும், குஜராத்தில் 69 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 102 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.