கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 540 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கும் நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 6 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 5,734 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 166 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 540 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கும் நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு 1135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருகின்றனர். அதற்கடுத்தபடியாக தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு பாதிப்பு உறுதியாகி எண்ணிக்கை 738 ஐ எட்டியுள்ளது. 8 பேர் பலியாகி இருக்கின்றனர். டெல்லியில் 669 பேரும் தெலுங்கானாவில் 427 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 473 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு வரும் 14 ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் அதை மேலும் நீடிக்க மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதற்கான அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் வெளியாகலாம்.