இந்தியாவில் 50 பேர் பலி..! பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்குகிறது..!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 151பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு 1965 பேர் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 50ஐ எட்டியுள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு 9 பேர் பலியாகி இருக்கின்றனர் . அதற்கடுத்தபடியாக கேரளாவில் 265 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 151பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.