ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு !! அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை இணைக்கலாம் !!!
ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.
இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த இணைப்பினை டிசம்பர் 31-ந் தேதிக்குள் செய்து முடித்து விட வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது.
இந்த ஆதார் வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு திட்டங்களின் பலன்களைப் பொதுமக்கள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் தலைமை வக்கீல் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார்.
வழக்குதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சியாம் திவான், வங்கி கணக்குகளுடனும், செல்போன் எண்களுடனும் ஆதார் எண்களை இணைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் வாதிடும்போது, அரசு நல திட்டங்களின் பலன்களை பெறுவதற்காக ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைப்பதற்கான கடைசி தேதி அடுத்த ஆண்டு மார்ச் 31 என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாலும், வங்கி கணக்குடனும், செல்போன் எண்ணுடனும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என கூறாததாலும், பிரதான ஆதார் வழக்கு விசாரணையை விரைவில் நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.