தெருநாய்கள் தொல்லைக்கு தேசிய அளவிலான சிறப்பு குழு ஒன்றை பிரதமர் மோடி அமைக்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்

இந்தியாவில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. தெரு நாய்கள் தாக்கியதில் வாஹ் பக்ரி தேயிலை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தொழிலதிபர் பராக் தேசாய் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மகாராஷ்டிராவில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 3.5 லட்சம், தமிழ்நாட்டில் 3லட்சம், ஆந்திராவில் 1லட்சம் நாய்க்கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. கொரானா ஊரடங்கு பின் தெரு நாய்களின் எண்ணிக்கை 6 கோடியாக பெருகி உள்ளது. இந்தியாவில் ரேபிஸ் நோய்க்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 20,000 பேர் உயிரிழப்பதாக தரவுகள் கூறுகின்றன. இது உலகின் நாய் கடி வழக்குகளில் 36 சதவீதமாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, உலகிலேயே அதிக ரேபிஸ் இறப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ரேபிஸ் இறப்புகளில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பதிவான இறப்புகளில் 30-60 சதவீதம் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளாகும்.

உலகின் பெரும்பாலான நாடுகள், தெரு விலங்குகளை கட்டுப்படுத்துவதற்கு திட்டவட்டமாக விதிகளை வகுத்துள்ளன. ஆனால், இந்தியாவில் அதுபோன்று எதுவும் இல்லை. இந்திய தண்டனை சட்டத்தில், தெருநாய்களை அடிக்கவோ, கொல்லவோ, வேறு இடத்துக்கு மாற்றவோ கூடாது. ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய அல்லது தடுப்பூசி செலுத்த எடுத்துச் செல்லப்பட்டால், பிடித்த இடத்துக்கே மீண்டும் கொண்டு சென்று விட்டுவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய் மீண்டும் யாரையும் கடிக்காது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.

பதிவு செய்யப்பட்ட, கயிற்றால் கட்டப்பட்ட நாய்களுக்கு அதனது உரிமையாளர்களே பொறுப்பு. ஆனால், தெரு நாய்களுக்கு யார் பொறுப்பு? எனவே, இந்தியாவில் தெரு நாய்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டு பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுகளிடம்தான் உள்ளன. ஆனால், இதுபற்றி பெரிதாக விவாதங்கள் எழுந்தது இல்லை.

இந்த நிலையில், இது தொடர்பாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவையில் நெரு நாய்கள் பிரச்சினை குறித்து பேசியுள்ளார். இந்தியாவில் ஆறு கோடி தெருநாய்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா செலவிடுவதாகவும், உலகில் உள்ள ரேபிஸ் நோயாளிகளில் 36 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தரகாண்ட் வன்முறையை வகுப்புவாதமாக்க வேண்டாம்: நைனிட்டால் மாவட்ட ஆட்சியர்!

அத்துடன், தெருநாய்கள் தொல்லைக்கு தேசிய அளவிலான சிறப்பு குழு ஒன்றை பிரதமர் மோடி அமைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் மிகவும் முக்கியமான, தெருநாய்கள் பிரச்சினையை சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து சுட்டிக்காட்டி அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதனை அறிவியல் ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் கையாள்வதற்கு உடனடியாக ஒரு தேசிய பணிக்குழு தேவை எனவும் அவர் இதற்கு முன்பு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.