எதுக்கு இத்தனை ஏற்பாடு…டிரம்ப் என்ன கடவுளா? - காங்கிரஸ் தலைவர் கேள்வி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்ன கடவுளா? அவரை வரவேற்க 70 லட்சம் பேர் எதற்கு? என காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24, 25ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகிறார். அவர் வருகையையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏராளணான சீரமைப்புப் பணிகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் பல கோடியில் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த நலன்களுக்காக இந்தியா வருகிறார்.
அவர் இந்திய - அமெரிக்க வர்த்தக மேம்பாட்டிற்காக வரவில்லை. அப்படி இருக்க அவரை வரவேற்க 70 லட்சம் பேர் எதற்கு? அவர் என்ன கடவுளா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் தான் பயங்கரவாதம் அதிகம் இருந்ததாக கூறிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு பதிலளித்த அதிர் ரஞ்சன் சவுத்ரி, 'காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரக்யா தாகூர் போன்றவர்களும் அதில் அடங்குவர். பயங்கரவாதிகள் யாரும் தங்களது உண்மையான அடையாளத்துடன் தாக்குதல்களை நடத்துவதில்லை' என்று தெரிவித்தார்.