Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸின் கேவலமான அரசியல் முகம்: தெலங்கானா முதல்வர் மகள் கவிதா சாடல்!

ரிது பந்து திட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கேவலமான அரசியல் முகம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளதாக தெலங்கானா முதல்வர் மகள் கவிதா விமர்சித்துள்ளார்

Congress dirty politics BRS Kavitha slams over Rythu Bandhu smp
Author
First Published Nov 27, 2023, 5:10 PM IST

விவசாயப் பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் மாநில அரசின் ரிது பந்து திட்டத்தை நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததற்காக காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடிய பிஆர்எஸ் எம்எல்சியும், தெலங்கானா முதல்வரின் மகளுமான கவிதா, காங்கிரஸ் கட்சியின் கேவலமான அரசியல் மீண்டும் வெளிவந்துள்ளது என்றார்.

ரிது பந்து திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக தெலுங்கானா அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது குறித்து பேசிய கவிதா, இந்தத் திட்டம் தேர்தல் வாக்குறுதி அல்ல என்றும், தற்போது நடைமுறையில் உள்ள ஒன்று என கூறினார். “காங்கிரஸின் கறைபடிந்த அரசியல் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது. ரிது பந்து தொகையை வழங்காமல் காலதாமதம் செய்கின்றனர். இது தேர்தல் வாக்குறுதி அல்ல. இது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட புதிய திட்டம் அல்ல” என்று அவர் கூறினார்.

தெலங்கானாவில் ரிது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க அம்மாநில அரசுக்கு கொடுத்த அனுமதியை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இத்திட்டம் குறித்து ஆளுங்கட்சி அமைச்சர் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் மீறிப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அந்த அனுமதியை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

கடந்த 10 பருவங்களில் 65 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிஆர்எஸ் அரசு ரூ.72,000 கோடியை வழங்கியுள்ள இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ் மீண்டும் மீண்டும் புகார் அளித்து வருவதாக கவிதா குற்றம் சாட்டினார். விவசாயக் கடன் தள்ளுபடி, ரிது பந்து திட்ட நிதியுதவி உள்ளிட்டவற்றை பறித்த காங்கிரஸே எதிரி என்பதை விவசாயிகள் உணர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

விவசாயிகளுக்கான பணப் பரிமாற்றத் திட்டமான விவசாய முதலீட்டு ஆதரவுத் திட்டத்தை (Rythu Bandhu) கடந்த 2018ஆம் ஆண்டில் தெலங்கானா மாநில பிஆர்எஸ் அரசு அறிமுகப்படுத்தியது. ரிது பந்து என்றால் விவசாயியின் நண்பன் என்று பொருள். விவசாயிகளின் ஆரம்ப முதலீட்டுத் தேவைகளுக்கு உரிய நேரத்தில் பண மானியம் வழங்குவது, விவசாயிகள் கடன் வலையில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பருவத்துக்கும் தலா ரூ.5,000 என ஆண்டுக்கு ரூ.10,000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios