பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் முதியோர் ஓய்வூதியம் வாங்கவந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு 2 ரூபாய் காசுகளைக் வங்கி நிர்வாகம் கொடுத்ததால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர். 

ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, நாட்டில் பணப்பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. மக்கள் வங்கியிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். 

இந்நிலையில் நவம்பர் மாதம் முடிந்ததையடுத்து, இம்மாத தொடக்கத்தில் ஓய்வூதியம் வாங்க ஏராளமான முதியோர்கள் வங்கிகளுக்கு செல்வார்கள். 



பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரில் அப்படி ஒரு வங்கிக்கு சென்ற முதியவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு ‘பொட்டலமாக கட்டி’ சில்லரை காசுகளைக் கொடுத்ததால், அவர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் வங்கியில் நேற்று முன் தினம் பணம் எடுக்க நின்று இருந்தனர். அப்போது ரூ.10 ஆயிரம் கேட்டவர்களுக்கு ரூ9 ஆயிரம் நோட்டுகளாகவும், ஆயிரம் ரூபாய்க்கு 2 ரூபாய் காசுகளும் மூட்டையாக வங்கி நிர்வாகம் அளித்தது. 

அதேபோல முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆயிரம் ரூபாய்க்கும் சில்லரை காசுகளாக கொடுத்ததால் முதியோர்கள் சுமக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். 

இது குறித்து ஒரு முதியவர் கூறுகையில், “ இந்த காலத்தில் சின்னக் குழந்தைகளே 2 ரூபாய் கொடுத்த வாங்க மறுக்கிறார்கள். நான் எப்படி இந்த காசுகளை பயன்படுத்தப்போகிறேன்?. மத்திய அரசு எங்களை மிகவும் தரக்குறைவாக நடத்துகிறது'' என்றார்.