முற்றும் மோதல்... முதல்வர் நாராயணசாமியின் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி மறுப்பு...
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதாக முதலமைச்சர் நாராயணாசாமி குற்றம்சாட்டியிருந்ததற்கு, ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதாக முதலமைச்சர் நாராயணாசாமி குற்றம்சாட்டியிருந்ததற்கு, ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்துக்கு துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல்போக்கே தொடர்ந்து வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் துணை நிலை ஆளுநரின் மேற்பார்வையில்தான் செயல்பட வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருமாறு அறிவுறுத்தியிருந்தார் ஆளுநர் கிரண்பேடி. இதற்கென தனிவாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்தி பணி விவரங்கள் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதிகாரி ஒருவர் அந்த குழுவில் தவறான தகவலை பதிவிட்டதால், தலைமை செயலாளருக்கு தெரிவிக்காமலேயே அவரை பணியிடை நீக்கம் செய்தார் கிரண்பேடி. இந்த விவகாரம் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே உள்துறை அமைச்சகம் மூலம் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தது புதுச்சேரி அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் நாராயணசாமியும், ஆளுநர் கிரண்பேடியும் அவ்வப்போது தங்கள் எதிர் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம், ஊழலுக்கு உடந்தையாக உள்ளது என்று நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சமூக பொறுப்புணர்வு நிதி வசூலித்து முறைகேடாக செலவு செய்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த ஊழலுக்கு ஆளுநர் கிரண்பேடி பொறுப்பேற்க வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். கிரண்பேடி அலுவலகத்தில் ரூ.85 லட்சம் ஊழல் நடந்து இருப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். அரசு நிதியில், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் முறைகேடு செய்தனர் என்ற குற்றச்சாட்டை மறுத்தார். சமூக பொறுப்புணர்வு நிதி அளிக்க முன்வருபவர்களுக்கு உதவிதான் செய்கிறோம் என்றும் ஆளுநர் கிரண்பேடி விளக்கமளித்தார்.