ஜவுளி குடோனில் பயங்கர தீ விபத்து... தூங்கிக்கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு..!
புனே அருகே ஜவுளி குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
புனே அருகே ஜவுளி குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள உருளி தேவாச்சி கிராமத்தில் ஜவுளி குடோன் உள்ளது. இந்த குடோனின் ஒரு பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீப்பிடித்து ஏற்பட்டது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது. துணி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் குடோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
ஆனால் ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் காயமடைந்த சிலரை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகின. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.