இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இலங்கைக்கு வரவிருந்த சீன கப்பலின் பயணத்தை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இலங்கைக்கு வரவிருந்த சீன கப்பலின் பயணத்தை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகம் சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துறைமுகத்தில் யுவான் வாங்க் - 5 என்ற சீனாவின் உளவு கப்பல், வரும் 11 முதல் 17 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சீனாவின் இந்த உளவு கப்பல், நம் நாட்டின் தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகியவற்றை கண்காணிக்க அனுப்பப்படுவதாக, மத்திய அரசு சந்தேகம் எழுப்பியது. தங்களுடைய சந்தேகம் மற்றும் எதிர்ப்பை இலங்கை அரசுக்கு மத்திய அரசு உறுதிபட தெரிவித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.. இஸ்ரோ தலைவர் சோம்நாத்

சீன கப்பல், செயற்கைக்கோள் ஆராய்ச்சியை மேற்கொள்ள இலங்கைக்கு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது இந்தியா - சீனா இடையேயான உறவில் பிரச்சனை உள்ள நிலையில், அதன் உண்மையான நோக்கம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. கடும் பொருளாதார நிதி நெருக்கடியில் இலங்கை அரசு தவித்து வரும் நிலையில், இந்திய அரசு மட்டுமே, 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை அளித்துள்ளது. இதைத் தவிர மனிதாபிமான அடிப்படையில் பல உதவிகளையும் செய்து வருகிறது. இதற்கிடையே சீனா கப்பல் அங்கு நிற்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இதையும் படிங்க: விடாது சீறும் கேசிஆர்.. மீண்டும் மோடியுடன் மோதல்..நிதி ஆயோக் கூட்டத்தை புறகணித்து கடிதம்..

இதை அடுத்து, சீன வெளியுறவு அமைச்சகத்துக்கு, இலங்கை வெளியுறவு அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வரும் பயணத்தை ரத்து செய்யும்படி கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், இரு நாடுகளும் ஆலோசனை நடத்தும் வரை, பயணத்தை நிறுத்தி வைக்கும்படி அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 13 ஆம் தேதி சீனாவின் ஜியாங்க்யின்னில் இருந்து புறப்பட்ட இந்த உளவுக் கப்பல், தற்போது கிழக்கு சீன கடலில் தெற்கு ஜப்பான் மற்றும் வடகிழக்கு தைவானுக்கு அருகே உள்ளது. இந்த நிலையில் சீன கப்பலின் வருகையை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.