முதன்முறையாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்...! பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர்..!
முதன்முறையாக சென்னை வந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இன்றும், நாளையும் சுற்றுப் பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று காலை 10.15 மணிக்கு மதுரை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார்.
கோவில் வாசலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் இருந்து கலசங்களில் சேகரித்த புனித நீர் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி தன் மனைவி மற்றும் மகளுடன் சுவாமி மற்றும் அம்மன் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.
பின்னர் பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபம் சென்றார். அங்கு கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அப்துல்கலாமின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் ராமேஷ்வரத்தில் இருந்து மதுரை வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார் ராம்நாத் கோவிந்த். அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியரசுத்தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் ஜனாதிபதியை வரவேற்றனர்.
மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.