பழங்குடியினர் கலப்பு திருமணம் செய்தால் ரூ.1 லட்சம் அபராதம்!
கலப்பு திருமணம் செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின சமூகம் முடிவு செய்துள்ளது

பழங்குடியினரிடையே அதிகரித்து வரும் கலப்புத் திருமணங்கள் மற்றும் லவ் ஜிகாத் தொடர்பாக அதிகரிக்கும் புகார்களுக்கு இடையே, பிற சாதிகள் அல்லது மதங்களில் திருமணம் முடிப்பதற்கு எதிரான உத்தரவுகளை சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் உள்ள பழங்குடியின சமூகம் பிறப்பித்துள்ளது.
மேலும், பழங்குடியினரைத் தவிர வேறு எந்த சாதியினரையும் திருமணம் செய்து கொண்டால், மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும் அச்சமூகம் முடிவு செய்துள்ளது. அதேபோல், பழங்குடியின இளைஞர்கள் வேறு சாதியில் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் வழிகாட்டுதல்களையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.
பழங்குடி சமூகங்களை ஒரு குடையின் கீழ் இணைக்கும் சர்வ் ஆதிவாசி சமாஜ் மகளிர் பிரிவின் துணைத் தலைவர் அனிதா குரேட்டி கூறுகையில், “பழங்குடி இளைஞர்கள் அதிகளவில் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். பிற சாதியினருடன் திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தங்களது கலாசாரத்தை இழக்கிறார்கள். கலாசாரத்தை அவர்கள் தொடர்வதில்லை” என தெரிவித்துள்ளார். இந்த அபராதம் விதிக்கும் முறையை சேதக் கட்டுப்பாட்டு நடவடிக்கை எனவும் அவர் விவரிக்கிறார்.
“பழங்குடியினப் பெண்கள் வேறு சாதி அல்லது மதத்தில் திருமணம் முடிக்கு நிகழ்வுகள் அதிகமாக நடப்பதை காண முடிகிறது. இதனால், ஒட்டுமொத்த ஆதிவாசி சமூகமும் மிகுந்த கவலையில் உள்ளது. எனவே, இதுபோன்ற திருமணங்களை முடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சமூகத்தின் மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர். இத்தகைய திருமணங்கள் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.” என ழங்குடியின அமைப்பின் பொறுப்பாளரும் இளைஞர் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான ஜெகி காஷ்யப் கூறியுள்ளார்.
பழங்குடியினத் தலைவர்கள், தங்கள் சமூகக் கூட்டங்களின் போது, தங்கள் சமூகத்தை ஒழுங்கமைத்து, வெவ்வேறு சாதிகள் அல்லது மதங்களுடன் திருமணங்களைச் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என கலப்பு திருமணங்களுக்கு எதிராக வலியுறுத்தியுள்ளனர்.
மணிப்பூர் வீடியோ: 7ஆவது நபர் கைது!
பழங்குடியினர் அல்லாதவர்களைத் தங்கள் சம்பந்திகளாக தேர்ந்தெடுப்பது தொடர்பான படித்த இளைஞர்களின் சுயாதீனமான முடிவுகளை எடுப்பது பழங்குடியினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. “சடங்கு மரபுகளுக்கு ஒழுக்கத்தை பேணுதல்” என்ற அடிப்படையில், சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் இத்தகைய தண்டனைகள் மரண தண்டனையை விட மோசமானதாக கருதப்படுகிறது. இது அவர்களுக்கு பெரிய வலியை கொடுக்கும் என கூறப்படுகிறது.
பழங்குடியினருக்கு அவர்களது சமூக வாழ்க்கை என்பது வலுவான முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதே இதற்கு காரணம் என பழங்குடி கலாச்சாரம் மற்றும் பஸ்தார் நாட்டுப்புற பாரம்பரியம் பற்றிய அறிஞர் ஷிவ் பாண்டே கூறியுள்ளார்.
ஆனால், வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் கலப்புத் திருமணத்திற்குச் செல்ல சட்டப்பூர்வ உரிமை உண்டு. பிற மதங்களில் திருமணம் செய்து கொள்வதை யாரும் தடை செய்யவோ அல்லது ஒதுக்கி வைக்கவோ கூடாது என்று பகுத்தறிவாளரும், தேசிய விருது பெற்றவருமான டாக்டர் தினேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.