சென்னையில் பயோமெடிக்கல் படிக்கும் ஜார்கண்ட் மாணவி, இன்டர்ன்ஷிப் பயிற்சி என்ற பெயரில் ஐதராபாத் அழைத்துச் செல்லப்பட்டு, நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இறுதியாண்டு பயோமெடிக்கல் படித்து வந்த கல்லூரி மாணவி
இண்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றுத் தருவதாக ஏமாற்றி கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் சென்னையில் இறுதியாண்டு பயோமெடிக்கல் படித்து வருகிறார். அதே வகுப்பில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவரது நண்பர் அஜய் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழகி வந்துள்ளனர்.
இன்டர்ன்ஷிப் பயிற்சி
இந்நிலையில் அஜய் மாணவிக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிப்பதாக கூறி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு அழைத்து சென்றார். பயிற்சிக்காக சென்ற மாணவி குகட்பள்ளியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். அப்போது அஜய், தனது நண்பரான ஹரி என்பவர் இருவரையும் விருந்துக்கு அழைத்திருப்பதாக கூறி அந்த கல்லூரி மாணவியை நிஜாம்பேட்டையில் உள்ள நண்பனின் பிளாட்டுக்கு அழைத்து சென்றார். ஹரியும் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஐதராபாத்தில் தங்கி சமோசா வியாபாரம் செய்து வருகிறார்.
மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்
இதனையடுத்து பிளாட்டுக்கு சென்றதும் கட்டாயப்படுத்தி அந்த கல்லூரி மாணவியை மது குடிக்க வைத்துள்ளனர். இதையடுத்து மாணவி போதையில் இருந்தபோது இருவரும் சேர்ந்து மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து பச்சுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவியை அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
