இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்ததையடுத்து, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 40 நாள் பயணத்திற்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சந்திரயான்-2 திட்டத்தின் தொடர்ச்சியாக, சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது. அதன்படி, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக மென்மையாக தரையிறக்கப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி படுத்தியுள்ளார். இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

வரலாறு படைத்த சந்திரயான்-3! நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி சாதனை! தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு!

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்ததையடுத்து, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாகவும்; புதிய இந்தியா உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Scroll to load tweet…

இந்திய விண்வெளித்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என தெரிவித்த பிரதமர் மோடி, இஸ்ரோவுக்கும், சந்திரயான்-3 திட்ட பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்தியா நிலவில் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த வெற்றி ஒரு வளர்ந்த இந்தியாவின் அடையாளம் என்று கூறினார். இந்தியாவின் வெற்றிகரமான நிலவு பயணம் இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல எனவும், அனைத்து மனிதகுலத்துக்கும் இந்த வெற்றி சொந்தமானது. பிற நாடுகளின் எதிர்கால நிலவு பயணங்களுக்கும் இது உதவும் என்றார்