mosquito

கொசுக்கள் வளர்த்தால், அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட மசோதாவுக்கு, ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த மசோதாவை நிறைவேற்றி அதை விரையில் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திர மாநிலத்துக்கென புதிய தலைநகர் அமராவதியை, அதிநவீன கட்டமைப்புடன் சந்திர பாபு நாயுடு உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் கொசுக்கள் பெருகி வருவது குறித்து ஆய்வு நடத்திய, அரசு அதிகாரிகள் குழு, அவற்றை ஒழிக்க புதிய நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

அதன்படி கொசுக்கள் உற்பத்தியாவதற்கு, சுற்றுப்புற சீர்கேடு மற்றும் மக்களின் அலட்சிய போக்கும் காரணமாக உள்ளதால் வீடுகள், கடைகள், உணவகங்கள், நெடுஞ்சாலையில் உள்ள தள்ளுவண்டிகள் இவற்றின் அருகில் கொசு உற்பத்தியாகும் விதமாக, கழிவுநீர், குப்பை கூளங்கள் உள்ளிட்டவை தேங்கும்படி செய்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்க அதிகாரிகள் குழு முடிவு செய்துள்ளது. 

இதற்கு மேலும் கொசுக்கள் உற்பத்தியானால், நாள்தோறும் 100 ரூபாய் அப்பகுதி மக்களிடம் அபராதமாக வசூலிக்கப்படும்.

காலி மனைகள், கட்டுமானம் நடந்து வரும் பகுதிகள், உணவகங்கள், விடுதிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் அருகே, கொசு உற்பத்தியாகும் வகையில், சுற்றுச்சூழல் இருந்தால், சம்பந்தப்பட்டோருக்கு, முதலில் அபராதம் விதிக்கப்படும்.

அதற்கு பின்னும், அதேநிலை தொடர்ந்தால், ஒரு மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் குழு முடிவு செய்து புதிய சட்ட மசோதா ஒன்றையும் உருவாக்கியுள்ளது.

இந்த மசோதாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் சட்டமாக்கப்படவுள்ளது.