மொதல்ல வங்கிக்கணக்கு... அப்புறம் பான்கார்டு….. இப்போ…டிரைவிங் லைசன்ஸ்!
வங்கிக் கணக்கு, பான் கார்டு ஆகியவற்றைத் தொடர்ந்து, ஓட்டுநர் உரிமத்தையும் ஆதார்கார்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளோம் என்று மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
அதேசமயம், ஆதாரும், ஓட்டுநர் உரிமமும் எப்போது இணைக்கப்படும் என்பதற்கு உரிய சரியான கால நிர்ணயம் குறித்து அமைச்சர் ஏதும் தெரிவிக்கவில்லை.
அரியானாவின் டிஜிட்டல் அரியானா மாநாடு 2017 நேற்று நடந்தது. அதில் மத்திய தகவல்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது-
மத்திய அரசு தேசிய அடையாள அட்டைகளை இணைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே பான்கார்டு, வங்கிக்கணக்கோடு ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 31-ந்தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. பான் கார்டே ஆதாருடன் இணைப்பதன் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தையும் தடுக்க முடியும்.
அடுத்ததாக ஓட்டுநர் உரிமத்தோடு, ஆதார் எண்ணையும் இணைக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசியுள்ளேன். டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம், உடல்ரீதியான அடையாளத்தை டிஜிட்டல்அடையாளம் உறுதிசெய்யும்.
ஆதார் அடையாள அட்டை மிகவும் பாதுகாப்பானது. சிறப்பாக நிர்வாகம் செய்யவும், அரசுக்கு அதிகாரம் அளிக்கவும் ஆதார் கார்டு மிகச்சிறந்த சாதனம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.