பாரத் ஆட்டா எனும் பெயரில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது

பாரத் ஆட்டா எனும் பெயரில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 'பாரத்' பிராண்டின் கீழ் கோதுமை மாவு (ஆட்டா) விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன் வாகனங்களை டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் தொடங்கி வைத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்திய அரசின் கோதுமை மாவு கிலோ ஒன்றுக்கு ரூ.27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. சாதாரண நுகர்வோரின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் கோதுமை மாவு சில்லறை விற்பனையைத் தொடங்குவது சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும். மேலும் இந்த முக்கியமான உணவுப் பொருளின் விலை குறையவும் உதவும்.

சத்தீஸ்கரில் தொடங்கிய வாக்குப்பதிவு: குண்டு வெடிப்பில் சிஆர்பிஎஃப் வீரர் காயம்!

கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் ஆகியவற்றின் அனைத்து கடைகள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்களிலும் பாரத் கோதுமை மாவு கிடைக்கும். அத்துடன் பிற கூட்டுறவு, சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் இதன் விற்பனை விரிவுபடுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளது என்றார். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசு கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் மூலம் ஒரு கிலோ பாரத் பருப்பை ரூ.60க்கு வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு பெரும் பயனளித்துள்ளன என்றும் அவர் கூறினார். விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து, அதன் பின்னர், நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருவதாக பியூஷ் கோயல் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் உதவ வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளார் என்றும் பியூஷ் கோயல் அப்போது கூறினார்.