உக்ரைன் ரஷ்யா போரில் கொல்லப்பட்ட இந்திய மாணவன் நவீனின் உடல், பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு கட்ட தொடர் முயற்சியால் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியது. 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தாக்குதல் நடந்து வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்ய படை தொடந்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் தலைநகர் கீவ், கார்கீவ், சுமி, மரியுபோ, லீவ் உள்ளிட்ட நகரங்களில் குண்டு மழைகளை பொழிந்து வருகிறது ரஷ்ய ராணுவம். போர் பதற்றம் காரணமாக அங்குள்ள மக்கள் சுமார் 25 லட்சத்திற்கு மேலானோர் அண்டைநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
கல்வி, வேலை நிமித்தமாக உக்ரைனில் குடியேறிய இந்தியர்கள், ஆபரேஷன் கங்கா எனும் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டனர். உக்ரைனின் அண்டைநாடுகளின் உதவியுடன் மத்திய அரசின் தொடர் முயற்சி காரணமாக அனைத்து இந்திய மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் உக்ரைனில் கடந்த ஒன்றாம் தேதி, கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழந்தார்.
போர் சூழலால் நவீனின் உடலை உடனே இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சியால் அவரது உடல், விமானம் மூலம் வரும் இன்று அதிகாலை பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் மாணவர் நவீன் உடலுக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் நவீனின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்றும் அதன்பின்னர் நவீனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் என்றும் அவரது தந்தை ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெரும் ஆபத்துகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் கடும் உழைப்பின் விளைவாக இன்று நவீனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தொடர் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்து பொறுமையாக இருந்த கர்நாடக அரசுக்கும், நவீனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ளுவதாக அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
