Central govt will announce soon Lunch for students at school holidays

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை, பள்ளி விடுமுறை நாட்களிலும் செயல்படுத்துவது குறித்து மத்திய மனித வளத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

அது குறித்து விரைவில் மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பட்டிணி சாவு

ஜார்கண்ட் மாநிலத்தில், கடந்த வாரம் 11 வயது சிறுமி, பள்ளி விடுமுறை நாட்களில் மதிய உணவு வழங்காததாலும், ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காததாலும் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பட்டிணியில் இறந்தார்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பின் அந்த மாநில அரசு ரேஷனில் உணவுப்பொருட்கள் வாங்க ஆதார் தேவையில்லை என்று உத்தரவிட்டது.

முடிவு

இதன் எதிரொலியாக பள்ளி விடுமுறை நாட்களிலும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பரம ஏழைகள் குடும்பம்

இது குறித்து மத்திய மனித வளத்துறையின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் செயலாளர் ரீனா ராய் கூறியதாவது-

பள்ளி விடுமுறை நாட்களிலும் பரம ஏழைகளின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் மதிய உணவுத் திட்டத்தை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த திட்டத்தின் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நல்ல சரிவிகித உணவு மதியம் இலவசமாக வழங்கப்படும். தேசிய உணவுப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த திட்டத்தை செயல்படுத்தப்படலாம்.

நிதி நெருக்கடி

ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறோம். இருந்தபோதிலும் விடுமுறை நாட்களில் மதிய உணவுக்கான செலவு, கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.