நாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகள் பொதுமக்களிடமிருந்து ரூ. 1000 மற்றும் ரூ.500 நோட்டுக்களை வாங்க மறுத்தால், பங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று இரவு அறிக்கை வெளியிட்டார். எனினும் பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை நவம்பர் 11வரை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து பெட்ரோல் பங்குகளில் ரூ.500 நோட்டையும், ரூ.1000 நோட்டையும் வாங்க மறுத்தனர். மேலும், பொதுமக்களிடம் ரூ. 500-க்கு முழுவதற்கும் பெட்ரோல் போடவும் வற்புறுத்தினர்.
ரூ.100, ரூ.200 க்கு போடும்படி கேட்டால் பல பெட்ரோல் பங்குகளில் போட மறுப்பதாகவும், கூட்ட நெருக்கடியை பயன்படுத்தி பலரும் கொள்ளையடிக்கின்றனர் என்றே பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், நாடெங்கும் மக்கள் தங்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில், இது குறித்து புதுடெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் இன்று அறிக்கை வெளியிட்டார். அதில், பெட்ரோல் பங்குகள்பொதுமக்களிடமிருந்து ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மறுத்தால் அந்த பங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
