மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சனையில் சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்தது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் இந்திய முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் நார்சிங் யாதவ். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக மல்யுத்தத்தில் 74 கிலோ உடல்எடை பிரீஸ்டைல் பிரிவில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள ஒரு இடத்தை பெற்றுத்தந்தார்.

பிரேசிலில் உள்ள ரியோடிஜெனீரோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்க இந்திய வீரர் நார்சிங் யாதவ் தகுதி பெற்றார்.

ஆனால் போட்டிக்கு 20 நாட்களுக்கு முன்பு நார்சிங் யாதவ் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க சாய் பயிற்சி மையத்தில் உள்ள இருவர் தனது உணவு அல்லது தண்ணீரில் ஊக்க மருந்தை கலந்து இருக்கலாம் என்று நார்சிங் யாதவ் குற்றம் சாட்டினார்.

இந்த பிரச்சனை குறித்து அரியானா போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நார்சிங் யாதவ் மீதான ஊக்க மருந்து சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது. இதனால் நார்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்பினார்.

இந்நிலையில் நார்சிங் யாதவ் ஊக்க மருந்தில் சிக்கியதில் சதி இருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை பிரதமர் அலுவலகம் ஏற்று அதற்கு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து நார்சிங் யாதவ் ஊக்க மருந்து விவகாரம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.