Makedatu dam issue : நாளை நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நாளை நடைபெற இருந்த நிலையில், வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கும் கார்நாடகத்திற்கும் இடையேயான காவிரி நீர் பிரச்சனை காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக அவ்வப்போது தீர்க்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், கர்நாடக அரசு கட்ட முயற்சிக்கும் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழகத்தின் திமுக, அதிமுக, பாகம உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், காவிரி டெல்டா விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே, மேகதாது அணை விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேகதாட்டு அணைக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, நாளை நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரும் இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிமும் எழுதியுள்ளார், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘‘மேகேதாது விவகாரத்தை தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது ஆகியவற்றின் மூலம் தமிழக அரசு மீண்டும் காவிரி விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது. இதனை கர்நாடக அரசு தக்கப்படி எதிர்க்கொள்ளும்'' என கூறினார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.