சிறையில் கலவரத்தை தூண்டி போராட்டம் - இந்திராணி முகர்ஜி மீது வழக்குப்பதிவு...
மகளை கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தனியார், 'டிவி' உரிமையாளரான இந்திராணி முகர்ஜி, மும்பை சிறையில் கலவரத்தை துாண்டி விட்டு, போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த பிரபல தனியார், 'டிவி' உரிமையாளரான இந்திராணி முகர்ஜி, தன் மகள் ஷீனா போராவை கொலை செய்து, எரித்ததாக புகார்கள் வந்தன.
இது தொடர்பான வழக்கில், இந்திராணி முகர்ஜி, அவரது 3வது கணவரும், தனியார், 'டிவி' உரிமையாளருமான, பீட்டர் முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து, மும்பை பைகுலா சிறையில் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ளார்.
250க்கு மேற்பட்டோர் உள்ள பெண்கள் சிறையில், கடந்த வாரம், ஒரு பெண் கைதி உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக, சிறையில் இருந்த பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை , சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், போராட்டத்தில் ஈடுபடும்படி, மற்ற கைதிகளை, இந்திராணி முகர்ஜி துாண்டிவிட்டுள்ளார். அதன்படி சிறையின் மேல் மாடியில், வேறு சில கைதிகளுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறையில், போராட்டத்தை துாண்டி விட்டதாக இந்திராணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.