ஆந்திராவின் புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோவில் வளாகத்தில், சன்னி லியோன் பாடலுக்கு ஆபாசமாக நடனமாடிய 5 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற புண்ணியத் தலமான ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் வளாகத்தில், சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடிய 5 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஸ்ரீசைலம் கோவிலுடன் இணைந்த இலவச உணவு வழங்கும் மையமான 'மல்லிகார்ஜுன அன்னசத்ரா'-வில் கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சிலர், புனிதமான அந்த வளாகத்திற்குள் சினிமா பாடல்களுக்கும், 'ஐட்டம்' பாடல்களுக்கும் நடனமாடியுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது காட்டுத்தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

காவல்துறை நடவடிக்கை

இந்த வீடியோக்கள் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோவிலின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பாபு புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஆந்திர காவல்துறையினர் அந்த 5 ஊழியர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவில் விதிமுறைகள் மற்றும் அறநிலையத்துறை சட்டங்களை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் கடும் எச்சரிக்கை

இது குறித்து ஸ்ரீசைலம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் ராவ் கூறுகையில்:

"கோவில் மற்றும் அதனைச் சார்ந்த வளாகங்களில் நடனமாடுவதோ அல்லது 'ரீல்ஸ்' (Reels) எடுப்பதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. புனிதமான இந்த இடத்தில் இத்தகைய அநாகரீகமான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது."

மல்லிகார்ஜுன அன்னசத்ரா தலைவர் ஷியாம் கூறுகையில், "ஊழியர்களின் இந்தச் செயல் பக்தர்களின் மனோபாவத்தைப் புண்படுத்தியுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து அந்த 5 ஊழியர்களும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்," என உறுதிப்படுத்தினார்.