CAG says akhilesh govt splurged Rs.15 crore on functions to distribute Rs 20 crore
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.20 கோடி உதவித்தொகை வழங்க ரூ.15 கோடி செலவு செய்துள்ளது என மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பா.ஜனதா அரசு
உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக யோகி ஆதித்தயநாத் இருந்து வருகிறார். தற்போது அங்கு சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது.
நிதியுதவி
இந்நிலையில், பொது மற்றும் சமூகநலத்துறையின் சார்பில் 235 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2012ம் ஆண்டு மே மாதம், அகிலேஷ் யாதவ் அரசால், வேலையில்லாத நபர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஷேத்திரிய கிராமின் வங்கி அல்லது தேசிய வங்கிகள் மூலமாக வேலையில்லாத நபர்களுக்கு பணம் வங்கிக்கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்.

ஒரு லட்சம் இளைஞர்கள்
இந்த திட்டத்தின் கீழ் 69 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 521 இளைஞர்களுக்கு ரூ.20.58 கோடி அரசு சார்பில் முதல்வர் அகிலேஷ் யாதவால் வழங்கப்பட்டது.
ரூ.15 கோடி செலவு
இதில் நிதியுதவி பெறும் இளைஞர்களின் பயணச்செலவு, நிகழ்ச்சிக்கான செலவு, இருக்கைகள், உணவு உள்ளிட்டவற்றுக்காக ரூ.8.07 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்காக ரூ.6.99 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.20.58 நிதியுதவி வழங்க அரசு ரூ.15.06 கோடி செலவு செய்துள்ளது.
மக்கள் பணம் வீண்
அரசின் இந்த அபரிமிதமான செலவை நியாயப்படுத்த முடியாது, நிதிச்சிக்கனம், சீர்திருத்தம் இல்லாமல், மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு காசோலை வழங்காமல், நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்தால், வங்கிக்கணக்கில் செலுத்தி இருந்தால், இந்த ரூ.15 கோடி செலவை தவிர்த்து இருக்கலாம்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
