மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  

மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். ஏராளமான அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால் நேரடியாக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும், ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் உயர்த்தி வழங்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட வரலாறு காணாத சூழ்நிலையின் காரணமாக, 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 ஆகிய தேதிகளில் இருந்து நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, 2021 ஜூலை 1 முதல் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 17 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படியை 28 சதவீதமாக, அதாவது 11 சதவீதம், உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 மூலம் உருவாகியுள்ள கூடுதல் தவணைகளை இந்த உயர்வு பிரதிபலிக்கும் என்றும், ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.