ஒரே பிரோவில் எடுக்கப்பட்ட 150 கோடி ரூபாய்.. எண்ண முடியாமல் திணறும் கட்டுகட்டாக சிக்கிய கரன்சி நோட்டுகள்
உத்தரபிரதேச மாநில தொழிலதிபர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் போது, ஒரே வீட்டில் இருந்து மட்டும் ரூ.150 கோடி பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் பியூஸ் ஜெயின். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் நண்பரும் தொழிலதிபரான இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவரது வீடு, அலுவலகம், தொழிற்சாலை, குளிர்பான கிடங்கு, பெட்ரோல் நிலையங்களில் சோதனையானது நடைபெற்று வருகின்றன. வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
பான்மசாலா பொருட்களை உரிய பில் இல்லாமல் போலியான இன்வாய்ஸ்கள் தயாரித்து, அதன் மூலம் வருமானத்திற்கு அதிகமான பணம் சேர்த்ததும், மும்பையில் இருந்து வாசனை திரவியங்களை இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்புவதிலும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்திலும் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
மேலும், ஜிஎஸ்டி முறைகேட்டியில் ஈடுப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, ஜிஎஸ்டி அதிகாரிகளும் வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல மணி நேரமாக நீடித்து வரும் இந்த சோதனையில் ஒரே வீட்டில் இருந்து சுமார் ரூ.150 கோடி ரொக்கம் கைப்பற்றபட்டுள்ளது. பியூஸ் ஜெயினுக்கு சொந்தமான அனந்தபுரி இல்லத்தில் நான்கு பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினர் எண்ணி வருகின்றனர். பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், சோதனையின் முடிவில் கூடுதல் பணம் கைப்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதற்கட்டமாக அதாவது இதுவரை எண்ணப்பட்டதில் மட்டும் ரூ.150 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணம் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, பணத்தை பாதுகாக்க துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தொழிலதிபர் பியூஸ் ஜெயின் மீது நடத்தப்பட்ட இந்த சோதனையானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.