"எளிமையானவர்னு சொன்னீங்க…முதல்வர் வருகைக்கு இப்படி களேபரமா?" - பி.எஸ்.எப். வீரர் குடும்பம் அதிர்ச்சி
உத்தரப்பிரதேசம் மாநிலம், தியோரியா மாவட்டத்தில் பி.எஸ்.எப். வீரர் குடும்பத்தினரைச் சந்திக்க முதல்வர் ஆதித்யநாத் வருகைக்கு முன்பாக அவர்களின் வீட்டில் ஏசி. சோபா, கார்பெட் முன் அறிவிப்பின்றி பொருத்தப்பட்டு, முதல்வர் வந்துசென்ற சில மணிநேரங்களில் அனைத்தும் அகற்றப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பி.எஸ்.எப் வீரர் கொலை
தியோரியா மாவட்டம், திகம்பர் கிராமத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் என்பவர் எல்லைப் பாதுகாப்பு படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 1-ந்தேதி ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பணியாற்றியபோது, பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டார். இந்த செய்தி அவர்களின் குடும்பத்தினரையும், கிராமத்தினைரயும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வாக்குறுதி
இதையடுத்து, பி.எஸ்.எப். வீரர் பிரேம் சாகர் குடும்பத்தினர் முதல்வர் ஆதித்யநாத் வந்து தங்களைச் சந்தித்தால்தான் இறுதிச்சடங்கு செய்வோம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, முதல்வர் ஆதித்யநாத் பி.எஸ்.எப் வீரர் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசி, உறுதியாக உங்கள் வீட்டுக்கு வருவேன், இறுதிச்சடங்கு செய்யுங்கள் என வாக்கறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் இறுதிச்சடங்கு செய்தனர்.
முன்அறிவிப்பின்றி
இந்நிலையில், கடந்த 12-ந்தேதி திகம்பர் கிராமத்தில் உள்ள பி.எஸ்.எப். வீரர் குடும்பத்தினரைச் சந்திக்க முதல்வர் ஆதித்யநாத் சென்றார். முதல்வர் வருகைக்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, அதிகாரிகள் எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி, பி.எஸ்.எப். வீரர் வீட்டுக்குச் சென்றனர்.
ஏசி. சோபா
அவர்களின் வீட்டு வரவேற்பு அறையில் அரசு சார்பில் சிவப்பு கம்பளம், ஏ.சி. முதல்வர் அமரும் வகையில் மிகப்பெரிய சோபா செட், ஜன்னல்களில் அலங்கார திரைச்சீலை என அந்த அறையை சொகுசு அறையாக மாற்றினர். இதைப்பார்த்த அந்த வீரரின் குடும்பத்தினர் அதிர்சியில் உறைந்தனர்.
முதல்வர் வருகை
அதன்பின், வந்த முதல்வர் ஆதித்தயநாத், பி.எஸ்.எப் வீரர் பிரேம் சாகர் மனைவியிடம் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்குவதாக உறுதி அளித்தார்.
அதிர்ச்சி
அதன்பின் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த ஏ.சி. கார்பெட், சோசெட், திரைச்சீலை ஆகியவற்றை பார்த்து பி.எஸ்.எப். வீரர் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், முதல்வர் ஆதித்யநாத் சென்ற சில மணிநேரங்களில் மீண்டும் வந்த அதிகாரிள், அந்த பொருட்களை எல்லாம் ஒரு வண்டியில் அள்ளிப்போட்டுக் கொண்டு சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.