அமித்ஷா சொத்து 300 சதவீதம் அதிகரிப்பு - ஸ்மிருதி ராணி பட்டமே முடிக்கவில்லையாம்...
குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பட்டப்படிப்பை முடிக்கவில்லை எனவும் தங்கள் வேட்பு மனுக்களில் குறிப்பிட்டு உள்ளனர்.
அமித்ஷாவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்கள். இதற்காக நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதில் இடம் பெற்றிருந்த தகவல்கள் வருமாறு-
பா.ஜ., தலைவர் அமித்ஷாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ.1.90 கோடியிலிருந்து ரூ.19 கோடியாக அதிகரித்துள்ளது. தனது வேட்புமனுவில், தனது மூதாதையர் மூலம் வந்த சொத்துகள் மதிப்பு ரூ.10.38 கோடி என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
அமித்ஷா மற்றும் அவரது மனைவியின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் கடந்த 2012க்கு பிறகு 300 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2012ல் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.8.54 கோடியிலிருந்து ரூ.34.31 கோடியாக அதிகரித்துள்ளது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியில் கல்வி தகுதி குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்தது. அவர் ‘பி.காம். பார்ட் 1’ முடித்திருந்ததாக கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தார்.
தற்போது தனது பட்டப்படிப்பை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை எனக்கூறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 2014ல் ரூ.4.91 கோடி என தெரிவித்திருந்தார். தற்போது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்து ரூ.8.88 கோடியாக அதிகரித்துள்ளது.
காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் பல்வந்த் சிங் ராஜ்புத், சொத்து மதிப்பு கடந்த 2012ல் ரூ.263 கோடியிலிருந்து தற்போது ரூ.316 கோடியாக அதிகரித்துள்ளது.
எம்.பி.,யாக அவர்தேர்வானால், கோடிஸ்வர எம்.பி.,க்களில் இவரும் ஒருவராக இருப்பார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் தனக்கு ஆண்டு வருமானம் ரூ.15,10,147 எனவும், தனது மனைவிக்கு ஆண்டு வருமானம் ரூ.20,15,900 எனவும் கூறியுள்ளார்.
கடந்த 2011க்கு பிறகு படேல் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு 123 சதவீதம் அதிகரித்துள்ளது.