ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரம்; வருண் காந்தி- மத்திய அமைச்சர் மோதல்
மியான்மரில் இருந்து அடைக்கலம் தேடிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரமாணப்பத்திரம்
ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் , நாடு கடத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்துள்ளது. மேலும், ரோஹிங்கியா முஸ்லிம்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தது.
கருத்து மோதல்
இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று இந்தி நாளேடு ஒன்றில் வருண்காந்தி கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் கருத்து தெரிவித்தார்.
டுவிட்டர்
பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி இது தொடர்பாக டுவிட்டரில் நேற்று பதிவிடுகையில், “ நான் பேட்டி அளித்தது என்பது முழுக்க இந்தியாவின் அகதிகள் குறித்த கொள்கை தொடர்பாக தெளிவாக வரையறையுடன் எப்படி அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறித்தானதாகும்.
ரோஹிங்கியா முஸ்லிம்களைப் பொருத்தவரை, நான் இரக்கத்துடன் அனுகுகிறேன். அடைக்கலம் கொடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை எண்ணி ஒவ்வொருவரையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள்’’ என்றுதெரிவித்து இருந்தார்.
பதிலடி
வருண் காந்தியின் டுவிட்டர் கருத்துக்கு பதிலடியாக மத்திய இணைஅமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ நாட்டின் நலனை கருத்தில் வைத்து இருக்கும் எவரும், இதுபோன்ற கருத்துக்களை கூறமாட்டார்கள். அரசின் நிலைப்பாட்டுக்கு மாறாக கருத்துக்கள் இருக்கின்றன’’ என்றார்.