தேர்தல் ஆணையம் ஒரு ”பல் இல்லாத புலி”..! பாஜக எம்.பி வருண் காந்தி தாக்கு..!
தேர்தல் ஆணையம் ஒரு ”பல் இல்லாத புலி” என பாஜக எம்.பி. வருண் காந்தி விமர்சித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள நல்சர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பேசிய வருண் காந்தி தேர்தல் ஆணையத்தை இவ்வாறு விமர்சித்தார்.
குறித்த நேரத்தில் தேர்தல் செலவினங்களை சமர்ப்பிக்காத எந்த ஒரு கட்சியையும் இதுவரை தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்ததில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவு, தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தித் தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்பு, தேர்தல் ஆணையம் என்கிறது. ஆனால் அந்த செயல்பாட்டை உண்மையிலேயே தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறதா?
தேர்தல்கள் முடிந்தவுடன் வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. அதற்காக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தையே நாட வேண்டியுள்ளது.
அனைத்து கட்சிகளுமே தேர்தல் செலவினங்களை தாமதமாகத்தான் சமர்ப்பிக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் அக்கட்சிகளை தகுதிநீக்கம் செய்வதில்லை. ஒரே ஒருமுறை பி.ஏ.சங்மாவின் தேசிய மக்கள் கட்சி மட்டுமே உரிய நேரத்தில் செலவினங்களை சமர்ப்பிக்காததால் அங்கீகாரத்தை இழந்தது. அக்கட்சி செலவினத்தைத் தாக்கல் செய்தவுடன் அதே நாளில் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் மீதான தனது ஆதங்கத்தை வருண் காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.