ஜிஎஸ்டி-னா என்னனு பாஜக அமைச்சருக்கே தெரியாதாம்..! அட கொடுமையே..!
ஜிஎஸ்டி என்றால் என்ன என்பது குறித்து எனக்கு தெரியாது என பாஜக ஆளும் மத்திய பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விற்பனை வரி, சேவை வரி, மதிப்பு கூட்டுவரி உள்ளிட்ட மறைமுக வரிகள், மாநிலந்தோறும் வெவ்வேறு விகிதத்தில் வசூலிக்கப்பட்டு வந்தன. அதை மாற்றி, ஒரே நாடு-ஒரே வரி என்பதை அடிப்படையாகக் கொண்டு சரக்கு மற்றும் சேவை(ஜிஎஸ்டி) வரிவிதிப்பு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி, எதிர்க்கட்சிகள், மாநில அரசுகள் ஆகியவற்றின் பரிந்துரைகளை பரிசீலித்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு ஜிஎஸ்டி சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
அமல்படுத்தப்பட்ட பிறகும் வரிவிதிப்பு விகிதங்கள் குறித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தியதை மத்திய பாஜக அரசு, தங்களது அரசின் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கிறது.
இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தின் உணவுத்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே, ஜிஎஸ்டி என்றால் என்ன என தற்போதுவரை தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு, தனது சாதனையாக பார்க்கும் ஜிஎஸ்டி என்றால் என்ன என்பது குறித்து தனக்கு தற்போது வரை தெரியாது என பாஜக அமைச்சரே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.