"அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஹமீது அன்சாரி" - பாஜக கடும் கண்டனம்!!
‘‘இந்திய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை உள்ளது’’ என துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் ஹமீது அன்சாரி கூறி உள்ளார். இதற்கு பாஜக கடும் ண்டனம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவை டி.வி. சேனலுக்காக, பிரபல செய்தியாளருக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது ஹமீது அன்சாரி கூறியதாவது-
நாட்டில் சகிப்பின்மை நிலவுவது குறித்து, பிரதமருடன் பேசியுள்ளேன். ஆனால், அப்போது என்ன பேசப்பட்டது என்பதை வெளியே கூறுவது தவறு.
இப்பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்கள் சிலருடனும் பேசியுள்ளேன். பொதுவாக எந்த பிரச்சினைக்கும் ஒரு விளக்கமும், காரணமும் தெரிவிக்கப்படும். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறோமா, இல்லையா? என்பதுதான் முடிவு செய்யப்பட வேண்டியதாகும்.
நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாட்டின் கொள்கைகளை முறித்து விட்டன. தாங்கள் பாதுகாப்பாக இல்லை என முஸ்லிம்கள் கருதுவது உண்மை தான். இவ்வாறு அவர் பேசினார்.
ஹமீது அன்சாரியின் இந்த ருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது பற்றி பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில்,
‘‘அவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் ஓய்வுபெறும் நிலையில், இந்த கருத்துக்களை கூறியுள்ளார். அவர் இன்னும் துணை ஜனாதிபதிதான். இத்தகைய கருத்துக்கள் அவரது பதவிக்கு கண்ணியம் சேர்ப்பதாக இல்லை. அவர் ஓய்வுக்கு பின்னர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத்தான் இத்தகைய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது’’ என்று தெரிவித்தார்.