விமானப் பயணத்துக்கு இனி அடையாள அட்டை தேவையில்லை - விரைவில் ‘பயோமெட்ரிக் முறை’
உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொள்ள இனி வரும் காலங்களில் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது.
இதற்கான விமான போக்குவரத்துறை அமைச்சகம், விமான நிலையத்தில் உள்ள புள்ளிவிவரங்கள், விமானநிறுவனங்களில் உள்ள பயணிகளின் புள்ளிவிவரங்கள், அடையாள அட்டைகளான ஆதார் கார்டு, பாஸ்போர்ட் எண் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து விமானப் போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என். சவுபே கூறுகையில், “ இனி வரும் காலங்களில் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அடையாளஅ ட்டையை காணிப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு பதிலாக ‘பயோமெட்ரிக்’ அடையாளங்களை காண்பித்தால் போதுமானது. விமான டிக்கெட் அல்லது இ-டிக்கெட் ஆகியவைகூட பயணத்தின்போது தேவைப்படாது.
பயணிகளின் விவரங்கள் அனைத்தும் விமான நிலையத்துடனும், விமானநிறுவனங்களுடன் இணைக்கப்படும். அதன்பின், பயணிகள் விமானநிலையத்துக்களு வரும் போது நடக்கும் சோதனை, பாதுகாப்பு சோதனை என அனைத்துக்கும் பயோமெட்ரிக் அடிப்படையிலேயே நடக்கும்.
முதல் கட்டமாக ஐதராபாத்தில் உள்ள ஜி.எம்.ஆர். விமானநிலையம், பெங்களூரு விமானநிலையத்தில் சோதனை அடிப்படையில் ஒரு சில வாயில் கதவுகளில் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணிகள் விரைவாக சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள்’’ என்றார்.
இதன் மூலம் விமான நிலையத்தின் நுழைவாயிலில் ஒரு ஸ்கேனிங் எந்திரம் மூலம் பயணியின் கை ஸ்கேன் செய்யப்பட்டு, அது அவர்களின் ஆதார் எண்ணுடன் சரியாகப் பொருந்துகிறதா என பார்க்கப்படும். அவ்வாறு சரியாகப் பொருந்தும் பட்சத்தில்,செல்போனில் பதவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் கார்டை காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.